நம்மை முளையாக்கவும், இலையாக்கவும் விதையானவர்களுள் சகோ. எமில் ஜெபசிங் அவர்களது வாழ்க்கையும் அடங்கும். ஜனவரி 10, 1940 அன்று மறைதிரு லு.ஊ. நவமணி ஐயரவர்களுக்கும், கிரேஸ் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்த இவர், தனது வாலிப நாட்களிலே, சகோ. P. சாம் மற்றும் சகோ. N. ஜீவானந்தம் போன்ற ஊழியர்களின் வழிநடத்துதலால், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளையில் தனது 17-வது வயதில் ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தார். ஏமி. கார்மைக்கேல், தாமஸ் உவாக்கர், ஈசாக்கு ஐயர் போன்ற தேவ ஊழியர்கள் கால் தடம் பதித்த பண்ணைவிளையிலே இவருக்கும் மிஷனரி தரிசனம் பிறந்தது.
சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணியை இராஜினாமா செய்துவிட்டு ஊழியத்திற்குப் புறப்பட்டார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவை நிறுவியவர்களுள் ஒருவராகவும், Trans World Radio (TWR) -வின் இயக்குநராகவும் செயல்பட்டார். மே 1, 1980 -ம் ஆண்டு சகோதரர் சிலருடன் இணைந்து விஷ்வவாணி ஊழியத்தைத் தொடங்கினார்; இவ்வூழியத்தினால், சந்திக்கப்படாத கிராமங்களில் சத்தியம் ஒலித்தது, கிராமங்களில் ஆலயங்கள் உருவாகின. அநேக வாலிபர்களும் தங்கள் வாழ்க்கையை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர். தாழ்மையிலும், வசனத்தைப் பிரங்கிப்பதிலும் இவருக்கென்று தனி இடம் உண்டு. 'அதிசயமான ஒளிமய நாடாம்' 'கர்த்தனே எம் துணையானீர்' உள்ளிட்ட காலத்தால் அழியாத 135 பாடல்களை நமக்குத் தந்தவர். 'India Believers Fellowship' ஊழியமும் இவரது முயற்சியே. 'The Good Samaritans', 'Vishvasi Sangathi' போன்ற இவரது ஊழியங்களால் தேவையுள்ளோர் தேவனைக் கண்டனர். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவ இயக்கங்களை இணைக்கும்படியாக 'Bless India Vision 2020' என்ற திட்டத்தையும் முன்நடத்திச் சென்றார். 2000-மாவது ஆண்டில் கணையத்தில் புற்றுநோய் உண்டானபோது, தனது பெலவீனத்தின் மத்தியிலும், 13 ஆண்டுகள் கர்த்தருக்காக தொடர்ந்து ஓடி 19 டிசம்பர் 2013 அன்று இளைப்பாறுதலில் பிரவேசித்தார். சரித்திரமாய்ச் சாய்ந்த இவரது சரீரம் தூத்துக்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது ஊழிய வாஞ்சை, வைராக்கியம், ஆத்தும தாகம் இன்றைய இளைஞர்களைப் பற்றிப் பிடித்தால் இந்தியா சந்திக்கப்படுவது எளிதானதே. சகோதரரின் பாடல்களை www.emiljebasingh.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மண்ணில் விதைகளாய் விழுந்தனர் அன்று
முளையாவது தெரியட்டும் நம் வாழ்விலே இன்று
கருத்துகள்
கருத்துரையிடுக